Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழகத்தில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த ஒன்றியங்களில் 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 46,639 பதவிகள் உள்ளன.
இதில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட பதவிகள் போக, இதர பதவிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், ராச்சாண்டார் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் ஜான்சன் (42) ஈடுபட்டிருந்தார். அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து,
அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். இந்நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தலைமைக் காவலர் ஜான்சன் உயிரிழந்தார். வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தலைமைக் காவலர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.